தோனி

 சமீபத்தில் நடந்து முடிந்த IPL இறுதி போட்டி அனைவருக்கும் நினைவிருக்கலாம் ..

இதுவரை உலக கிரிக்கெட் வரலாற்றில் எந்த பெரிய டோர்னமெண்ட் சாம்பியன்ஷிப் கப் வாங்கும் போதும் (இது மற்ற விளையாட்டுகளிலும் நடந்ததா தெரியவில்லை ) எந்த ஒரு கேப்டனும் உடன் அணியின் நட்சத்திர வீரரரையும், அணியில் இருந்து ஓய்வு பெற போகும் வீரரரையும் சேர்த்து அழைத்து க்கொண்டு அவர்களை முன்னிருத்தி அவர்களை சாம்பியன்ஷிப் கப் வாங்க சொன்னதில்லை..
அதான் தோனி... பெரும் தலைவனுக்கான குணம்!
கடந்த ODI உலக கோப்பை அரையிறுதி போட்டி நினைவிருக்கலாம்...
கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்கும் இந்தியா தோல்வி அடைந்தது மறக்காது...குறிப்பாக அந்த ரன் அவுட் க்கு பின் கண்ணீருடன் வெளியே வந்த தோனி முகம்.. மறக்கவே மறக்காது
அவுட் ஆகி வெளியே செல்லும் நொடி வரை...
ஒவ்வொரு இந்திய ரசிகன் மனதில் ஒரு தைரியத்தையும்.. எதிரணி தரப்பில் ஒவ்வொருவரின் மனதில் பயத்தையும் உண்டு செய்த அந்த பெயர் தான் தோனி....
தோனி ஒரு சாம்பியன்... சிறந்த கேப்டன்... லீடர்... கீப்பர்... இதெல்லாம் தாண்டி தோனி ஒரு உணர்வு..... அவர் நம்மை போல ஒருவர் என உணர்த்தியவர்...
அவர் கடைசி ஒருநாள் போட்டியில் அழுதுகொண்டே வெளியே வந்த போது... பார்த்துக்கொண்டு இருந்த கோடி கண்களின் ஓரம் இருந்த கண்ணீர்.. அந்த பெயர் தான் தோனி...
உலகில் ஒரு பெரும் கூட்டத்தை கட்டிப்போட்ட Sporting Legends வரிசையில் தோனி க்கு ஒரு தனி இடமுண்டு...
""ராஜகோபாலன்...சச்சினோட டை ஹார்ட் ஃபேன் நீ... நீயும் தோனி க்கு ரசிகன் ஆனது தான் ஆச்சரியம்" என்றே பலர் என்னை கேட்டுள்ளார்கள்
இளையராஜா ரசிகன் ரஹ்மானையும் ரசிக்க முடியாது என்கிற முட்டாள்தனமான மனோபாவம் இது...end of the day both are Legends in their own way... சச்சின் எனக்கு வாழ்க்கை முறை..என் கூட வளர்ந்த நபர்....என் ஒவ்வொரு நினைவிலும் சச்சின் நினைவு கலந்து இருக்கும்...தோனி நான் முதலில் விலகி இருந்து பார்த்து பிறகு பிடித்து பார்த்து பிறகு ரசிக்க தொடங்கி பிறகு பிரமிக்க தொடங்கிய நபர்...இதெல்லாம் நடக்கவே நடக்காது என்று நினைத்ததை நடத்தி காட்டியது தோனி...
சிம்பிளா சொல்லணும் ன்னா...தோனி ஒரு டிபிக்கல் ஐட்டக்காரன்... வாழ்க்கைல சில சம்பவம் இருக்கும்... சம்பவம் செய்வதையே வாழ்க்கையாக அமைத்து கொண்டார் தோனி..
The Legend of Dhoni will live on.
எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமான தோனி நினைவு... அவரின் பேட்டிங், கீப்பிங் moments அல்ல... தன் முதல் கேப்டன் கங்குலியின் கடைசி ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில்..அவரை கேப்டன்சி செய்யுமாறு அழைத்தது...
This man is something என நான் உணர்ந்த தருணம்.
1) எந்த சூழலிலும் பதட்டம் என்பது நாமாக உடுத்தி கொள்ளும் ஆடையே ஒழிய, நமக்கும் கிடைக்கும் ஒரே ஆடை அல்ல.. அதை தாராளமாக புறம் தள்ளலாம்
2) வாழ்வில் வெற்றி தோல்வி இரண்டுமே ஒரு நிகழ்வல்ல, அது இயல்பு.. நாம் மட்டுமே எப்பொழுதும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்.. அனைவரும் ஜெயிக்கவே விரும்புவர்.. செய்வதை சரியாக செய்தால், தோல்வி பெற்றாலும் அது வெற்றியே.
3) தோல்வியை பக்கத்தில வைத்து மட்டுமே ஆராய வேண்டாம்... வெற்றியை தள்ளி நின்று மட்டுமே ரசிக்க வேண்டாம்..
4) தோல்வி வருத்தப்படுவதற்கான ஒரு விசயம் மட்டுமல்ல.. வெற்றி கொண்டாடத்துக்கான ஒரு விசயம் மட்டுமல்ல.. இரண்டிலும் படிப்பினை ஏராளம்..
5) தோல்வி க்கு காரணம் அறிகிறவன் வெற்றியை நோக்கி பயண படுகிறான்.. வெற்றி க்கு காரணம் அறிகிறவன், வெற்றியை எப்போதும் தக்கவைத்துக் கொள்கிறான்
6) ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.. அதை அவர்களிடம் பெற்று கொண்டால் போதும்.. அனைவருமே எல்லாமும் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அந்த தனித்தன்மை யும் விலகி, அந்த நபரையும் நம்முடைய அணியில் இருந்து நாம் இழக்க நேரிடும்
7) நம்முடைய strength நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் நம்முடைய weaknessம் தெரிந்து வைத்துக் கொள்வது... நீங்கள் தலைவர் என்றால் உங்கள் அணியின் strength weakness மிக நிச்சயமாக நுணுக்கமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்
8 ) உன்னை மட்டம் தட்டும் ஒவ்வொருவருக்கும் நீ பதில் சொல்ல தேவையில்லை, உன் வேலையை நீ செவ்வனே செய்து வந்தால், பதில் தானாகவே சென்றடையும்
9) எவ்வளவு பெரிய இடத்துக்கு சென்றாலும் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் கால் தரையில் இருக்க வேண்டும்... தலைக்கணம் துளியும் தேவை இல்லை.
10) இக்கட்டான சூழலில் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்.. அப்பொழுது தான் வெற்றியோ தோல்வியோ அதை நேரடியாக சந்திக்க உன் மனம் பக்குவப்படும்.
11) உன்னால் முடியாது என்பதை நீ ஒப்புக்கொள்ளும் வரை உன்னால் முடியும்
.... இப்படியாக கிரிக்கெட் விளையாட்டு, அதில் இருக்கும் நுணுக்கம், கேப்டன்ஷிப், இளைஞர்களை ஊக்க படுத்துவது.. இதையெல்லாம் தாண்டி.. இந்த மனிதரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் ஏராளமான உண்டு... நான் புரிந்து கொண்ட சில முக்கிய படிப்பினை இவை..
ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்... Any Psychology students, Business schools, Leadership institutes, can take a lot of leaves out of his book.
டெஸ்ட் போட்டியிலிருந்து , கேப்டன்சியிலிருந்து இவர் விலகிய விதம்... யாரும் கிரிக்கெட்டை விட முக்கியமானவர் அல்ல என்பதை உரக்கச் சொல்லி சென்ற கம்பீரம்
முற்றிலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் போதும்... நாளைக்கு திங்கட்கிழமை என சொல்வது போல சொல்லி விலகி செல்வார் என்பதில் சந்தேகமில்லை... என்றே என்னுடைய முந்தைய தோனி பதிவுகளில் எழுதினேன்...
அதை விட மோசமாக...சரி நான் தூங்க போறேன் குட்நைட் என்பதை போல இன்டர்நேஷனல் ரிட்டையர்மெண்ட்டை அநௌன்ஸ் செய்தார்..
IPLல் இது தான் என் கடைசி ஆட்டம் என்பதை சொல்வதிலும் அப்படியே செய்வார்
Life is Crazy, Take it Easy .. இதான் தோனி ஸ்டைல்..
இந்த உலகத்தில்... , மனிதனின் தனிப்பட்ட இன்ப துன்பத்திற்கு பல சிறிய சிறிய உலகங்கள் உண்டு.. நான் ஒரே நேரத்தில் பல உலகங்களில் வாழ்ந்து மகிழ்ந்து வருகிறேன்... தமிழ் இலக்கியம், சச்சின், இளையராஜா, ரஜினி, ரஹ்மான்... இப்படியாக பெரும் மகிழ்ச்சி தரும் பல உலகங்கள் உள்ளன...
அப்படி நானிருக்கும் இன்னொரு உலகம் உண்டு.. அந்த உலகத்தில் பரபரப்பு க்கு பஞ்சமில்லை.. மாஸ் க்கு பஞ்சமில்லை.. Swag க்கு பஞ்சமில்லை... கருத்து வேறுபாடு க்கு பஞ்சமில்லை... குறைகளுக்கு பஞ்சமில்லை.. .. இதுவும் ஒரு தனி உலகம்.. இந்த உலகத்தில் இருப்பவருக்கு தான் இது புரியும்..... தோனியின் உலகம்...
The Name Is MS Dhoni
இன்னும் சில பல வருடங்கள் கழித்து , ஒரு உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெல்லும் நிலையில் இருக்கும் போது... ட்ரசிங் ரூமிலிருந்து பயிற்சியாளர் இரு கை தூக்கி ... "நிதானம் நிதானம்.. இன்னும் ஜெயிக்கவில்லை" என சாந்த படுத்தி ...வெற்றி கிட்டும் வரை கால் தரையில் இருக்க வலியுறுத்துவார்... வென்ற பின்னும் அப்படி இருக்க வேண்டுகோள் வைப்பார்..
வெற்றி கொண்டாட்டங்களை ஒரு ஓரமாக நின்று ரசிப்பார்... அனைவரும் புகைப்படங்கள் எடுத்து கொண்டிருக்க, இவர் ஓரமாக சில குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருப்பார்...
அந்த பயிற்சியாளர் பெயர் ..
மகேந்திர சிங் தோனி...

No comments:

Post a Comment